Monday, September 26, 2011

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்



மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.
நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர் செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்து கொள்வோம்.
சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.
சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
உடல் சூடு நீங்க: வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும்.
இதனால் தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.
சிறுநீர் பெருக: மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது.
சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.
பித்தத்தைக் குறைக்க: உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும் போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.
சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.
சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும், உடலை வலுப்படுத்தும்.
பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.
சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.
சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

சிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து...


* சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

* சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

* சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.

* வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.

* வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

* வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.

* உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.

* மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Friday, September 9, 2011

வெங்காயம்

 
வெங்காயத்தின் தாவரவியல் பேரு அல்லியம் சீபா. இது ஒரு மீட்டர் உயரம் வரை வளரும் தண்டுள்ள சின்ன செடி. இதோட உண்மையான தண்டு செதில் இலைகளால் மூடப்பட்டு குமிழ் தண்டாக காணப்படுது. இந்த தண்டில் இருந்து பசுமையான இலைகள் வெளி வருது.
இந்த தாவரத்தோட பசுமையான இலைகள் செதில் இலைகளால் ஆன குமிழ், தண்டு ஆகியவை மருத் துவப் பயன் உள்ளவை. கிருமிகளுக்கு எதிரானது. வீக்கம், வலி போக உதவுது. ரத்த ஓட்டத்திற்கு சிறந்த மருந்து. மூட்டுவலிக்கு எதிரானது. சளி, ப்ளூ காய்ச்சல், இருமலைக் குணப்படுத்தும் மருந்து இது.
 
பல் சொத்தை போன்ற வாயில் உண்டாகும் நோய்களையும் குணப்படுத்துது. புண்களுக்கு வெங்காயம் பற்று போட்டு கட்டலாம். இதோட சாறு மயக்கத்தைத் தெளிவிக்குது. சிறுநீர்ப்போக்கைத் தூண்டுது. நம்ம வீட்டுல சாம்பார் வைச்சாக்கூட வெங்காயம் தான் போடுவோம். இல்லையா..... 

வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர
நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு,
பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை பூசிவர
மறைந்து விடும்.

திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி
முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது
வெங்காயச் சாற்றையும்,குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால்
சீதபேதி நிற்கும்.

வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு
சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து
அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது.
எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப்
பயன்படுத்தலாம். பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை
வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

Sunday, September 4, 2011

தொழுநோயை குணமாக்கும் பூவரசு



மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.

காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது.

இது கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை.

சருமநோய்களை குணமாக்கும்

பூவரசு இலைகளை அரைத்து வதக்கிக் கட்ட வீக்கம் குறையும். இதன் பழுப்பு இலையை உலர்த்திக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து போட சொறிசிரங்கு, கரப்பான்,ஊரல், அரிப்பு குணப்படும்.

பூவரசனது வயிற்றுப்புழுக்களைக் கொன்று நம் உடலைத் தூய்மையாக்கி உடலை உரமாக்கும் தன்மை உடையது. பூவரசங்காயிலிருந்து முறைப்படி எடுக்கப்படும் எண்ணெய் பெருவயிறு, வயிற்றுப்புண் இவைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

பூவரசங்காயை இடித்து சாறு பிழிந்தால் இலேசான பசபசப்புடன் மஞ்சள் நிற சாறு வரும். இதை முகத்திலுள்ள கறுப்புப் பகுதிகள், செயின் உராய்வதால் உண்டான கறுத்த பகுதிகளில் தடவினால் கருமை மாறும்.

மஞ்சள் நிறமுள்ள பாலை தோலின் மீது தடவினால் எச்சில்தழும்புகள் மாறும். மூட்டு வீக்கங்களுக்கு பூச வீக்கம் கரையும். பூவரசம் பட்டை எண்ணெயினால் வெள்ளை நோயும், சரும நோயும் நீங்கும்.

பூவரசங்காய்களை உடைத்தால் மஞ்சள் நிறமான ஒரு திரவம் கசியும். இதனை எடுத்து அடிபட்ட காயங்கள், விஷக்கடிகள், சரும நோய்களான படர்தாமரை, செதில்படை, சிரங்கு இவைகளுக்குத் தடவி வர இளிதில் குணம் கிடைக்கும்.

தொழுநோய் குணமாகும்

பூவரசு பட்டையை எடுத்து பாலில் அவித்து உலர்த்தி அதனுடன் சம அளவு பரங்கிப் பட்டை சேர்த்து செய்த சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு பசு வெண்ணெயில் காலை,மாலை இரண்டு வேளை உட்கொள்ள நாள்பட்ட தொழு நோய் தீரும். இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் போது உணவில் உப்பை நீக்க வேண்டும்.

காணாக்கடி போன்ற பூச்சிக்கடிகளுக்கு பூவரசு மரப்பட்டை 210 கிராம் எடுத்து இடித்து ஒரு சட்டியிலிட்டு, 1400 மி.லி. நீர் விட்டுக் காய்ச்சி மூன்றில் ஒன்றாக வற்றியபின் வடிகட்டி, தினமும் இரண்டு வேளை அருந்தி வந்தால் காணாக் கடி விஷம், பாண்டு, சோகை, பெருவயிறு முதலிய நோய்கள் குணமாகும்.

வெள்ளைப்படுதல் குணமாகும்

வெண்குஷ்ட நோயால் உதட்டில் ஏற்பட்ட வெண்புள்ளிகளைப் போக்க பூவரசின் முதிர்ந்த பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றினை வாயிலிட்டு அடிக்கடி கொப்பளிக்க வேண்டும். இது போல் பல தினங்கள் கொப்பளித்து வரவேண்டும். அந்தச் சாற்றை விழுங்கி விட்டால் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.

வெள்ளைப் படுதல் நோய் ஏற்படும் பெண்களுக்கு, பூவரசம் பட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை தேவையான அளவு உள்ளுக்குக் கொடுக்க நோய் குணமாகும்.

கருத்தரிப்பதை தடை செய்யும்

‘நூறாண்டு சென்றதொரு நுண் பூவரசம் வேர்
நூறாண்டு குட்டைத் தொலைக்குங்காண்-வீறிப்
பழுத்த இலை, விதை, பூ, பட்டை இவை கண்டால்
புழுத்த புண் விரேசனமும் போம்.’ என்று பூவரச மரம் பற்றி பழம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

100 ஆண்டுகள் சென்ற மரத்தின் காய், பூ, பட்டை ஆகியவற்றைச் சம அளவு பொடித்துக் காலை, மாலை 1 தேக்கரண்டி நீண்ட நாள் சாப்பிட்டுவரத் தோல் வியாதிகள் அனைத்தும் தீரும்.

குழந்தை பேற்றினை தள்ளிப்போட விரும்புபவர்கள் பூவரசன் பட்டைத்தூள் 100 கிராம், சீமைக்காசிக்கட்டி 100 கிராம், இந்துப்பு 100 கிராம், சேர்த்து அரைத்து கருத்தடைக்காக இதனைச் சாப்பிடலாம்.
புதிதாக திருமணமான பெண்கள் மாத விலக்கான நாள் முதல் ஏழு நாள் 10 கிராம் அளவு வெந்நீரில் குடிக்கவும். ஏழு நாளும் பால், மோர், மிளகு ரசம், பருப்புத் துவையல் மட்டும் சாப்பிடவும். நல்லெண்ணெயில் தலை முழுகவும். இதனால் கருப்பை சுருங்கிவிடும். ஒரு வருடம் வரை கருத்தரிக்காது இது நல்ல கருத்தடை முறை. கருப்பைக் கோளாறுகளை நீக்கும். ஆண்களுக்கு ஆண்மையை வலுப்படுத்தும். மூலக்கிருமிகளை அழிக்கும்.

மஞ்சள் காமாலை குணமடையும்

கல்லீரலின் பலவீனம்தான் மஞ்சள் காமாலை நோயின் தாக்கம். பூவரச மரத்தின் பழுத்த இலை இரும்புச் சத்து நிறைந்தது. பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும். இது மஞ்சள் காமாலை நோயை அறவே நெருங்க விடாமல் உடலை பாதுகாக்கும்.

மேக நோய்க்கு மருந்து

உடல் கிருமிகளை அழிக்க வல்ல சக்தி கொண்டது பூவரசு என்று அகத்தியர் கூறியுள்ளார். இதன் காயை இடித்து சாறு எடுத்தால் பசபசப்புடன் பால் இருக்கும். இது மேக நோய்களை போக்க சிறந்த மருந்தாகும். இது சித்தர்கள் கண்ட அனுபவ மருந்தாகும்.

சொறி, சிறங்கு குணமாகும்

நூறு வருடமான பூவரச மரத்தின் வேரை நன்கு உலர்த்திப் பொடி செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.

பூவரசம் வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி 50 மி.லி.யுடன் 10 மி.லி. ஆமணக்கு எண்ணெய் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க பேதியாகும். பேதி நிற்க மோர் குடிக்கவும். இதனால் சொறி, சிறங்கு, படை நோய்கள் குணமாகும்.

தேக்கு, கோங்கு போன்ற மரங்கள் வரிசையில் சிறந்த மரம் இந்த பூவரசு மரம். இம் மரம் வீட்டு ஜன்னல்கள், கதவுகள் செய்வதற்கும், மரச்சாமான்கள் செய்வதற்கும் ஏற்றவை. இம் மரங்களை வீட்டு உபயோகத்துக்காகவும், ஏனைய பயன்பாட்டுக்காகவும் வெட்டியவர்கள், அதை வளர்க்க முன்வரவில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்த இந்த மரம் தற்போது காண்பதற்கு அரிதாக மாறிவிட்டது. தற்போது கிராமப்புறங்களில் இந்த பூவரச மரம் காண்பதே அரிதாகிவிட்டது.

Tuesday, August 30, 2011

பெண்களை தாக்கும் குடல் உளைச்சல்

 
நடைமுறையில்  எங்கும் வேகம், எதிலும் வேகம் என பரபரக்கும் இந்த கம்ப்யூட்டர் உலகத்தில் காலை முதல் மாலை வரை ஒரே பதற்றம், பரபரப்பு. அறிவியலின் வளர்ச்சி நமது வாழ்க்கை முறையை அடியோடு மாற்றிவிட்டது. இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழல் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
 
குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் . இந்த மன உளைச்சல், அழுத்தம் படிப்படியாக நாளடைவில் உடலையும் பாதிக்கிறது. இவ்வாறு வாழ்க்கை முறை மாறியதால் ஏற்படும் நோய்களில் ஒன்றுதான் குடல் உளைச்சல் நோய்.இந்த மன உளைச்சல், அழுத்தம் நாளடைவில் உடலையும் பாதிக்கிறது.
 
இவ்வாறு வாழ்க்கை முறை மாறியதால் ஏற்படும் நோய்களில் ஒன்று தான் குடல் உளைச்சல் நோய். அவசரம், கவலை போன்றவைகளே இதற்கு முக்கிய காரணம். இந்நோய் பாதித்தால் இரைப்பையில் புண் ஏற்படும். 70 சதவீத பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி வீட்டில் இருக்கும் பெண்களைம் இது அதிகம் பாதிக்கிறது.
 
அறிகுறிகள்:
 
வயிற்றில் எரிச்சல், வலி, இரைச்சல், சாபிட்ட உடன் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை மலம் கழித்தல்,  நெஞ்சு ஆகியவற்றில் எரிச்சல், வயிறு உப்புசமாக இருப்பது போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
 
பெரும்பாலும் வயிறு சம்பந்தமான நோய்களுக்கு உள்ள அறிகுறிகளே இந்நோய்க்கும் தெரிய வரும். அவசரம், கவலை போன்றவைகளே இந்த நோய்க்கு மிக முக்கிய காரணமாகும். எனவே மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி




*வயிறு வலிக்கு- வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்கவும். இல்லை வெந்தயத்தை வறுத்து பொடிசெய்து ஒரு டம்ளர் மோரில் அரை தேக்கரண்டி வீதம் கலந்து குடிக்கவும்.
 
* வாயு உபாதை- சுக்கு, சோம்பு, வெல்லம் மூன்றையும் கலந்து சாப்பிடவும்.
 
* கடும்சளி இருமலுக்கு- அரை தேக்கரண்டி மிளகாய் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் மிளகு,மஞ்சள்பொடி, கட்கண்டுடன் சேர்த்து வடிகட்டி குடிக்கவும்.

Thursday, August 25, 2011

சரியாக தூங்கா விட்டால் மன அழுத்தம் ஏற்படும்

 
 
தூங்காதே  தம்பி  தூங்காதே என்ற பாட்டினை கேட்டிருப்பீர்கள்.ஆனால் தூங்கினால்தான் ஆற்றல் கிடைக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும். நாள் முழுவதும் உழைக்கும் நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்க தூக்கம் அவசியமாகிறது. சில நாட்கள் தூங்காமல் இருந்தால் ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து நோய் எதிர்ப்பு தன்மையும் குறையும்..
 
தசைகளோட வலிமையும் குறையும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. உடல் வெப்ப நிலை  மாறுபடும். இது உடலுக்கு சிக்கலை உண்டாக்கும். உள்ளத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தும்.  தூங்காமல் இருந்தால் ரத்தத்தில் இருக்கும் மன அழுத்தத்திற்கு  காரணமான  கார்டிசோல் என்னும் ரசாயனத்தின் அளவு கூடுகிறது.
 
ஞாபக சக்தி குறைவு , வேலைகளில்  தவறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். உடலையும் மனசையும் சேர்த்து  பாதிக்கும் ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு . எளவே  தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுப்பது நல்லது.

Wednesday, August 24, 2011

ரத்த அழுத்த நோய்க்கு வைரஸ் கிருமிகளே காரணம்:சீன டாக்டர்கள் தகவல்

 
மன அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றால் ரத்த அழுத்தம் நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தற்போது அந்த நோய்க்கு பொதுவான வைரஸ் கிருமிகளே காரணம் என தெரிய வந்துள்ளது.


சீனா தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சாயோயங் இருதய நோய் ஆஸ்பத்திரியின் டாக்டர் யங் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.அதில், மனித உடலில் உள்ள சைடோமெகலோ என்ற வகை வைரஸ் கிருமிகளுக்கும், உயர் ரத்த அழுத்த நோய்க்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.


இந்த வைரஸ் கிருமிகள் தாக்குதலினால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை கண்டுபிடிப்பது சிரமம். ஏனெனில் அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாது. இந்த வைரஸ் கிருமிகளை தெளிவாக கண்டுபிடிப்பதன் மூலம் அதற்கான மருந்து மாத்திரைகளை கண்டுபிடிக்க முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ரத்த அழுத்த நோயை மிக எளிதாக குணப்படுத்த முடியும் என்றும் கூறி உள்ளனர்.

Sunday, August 21, 2011

அம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி?


வெயில், மழை கலந்த சீதோஷ்ண நிலை தற்போது நிலவுவதால் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. சளி, காய்ச்சல் தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்கள் வரை வைரஸ்களால் ஏற்படுகின்றன. அம்மை நோய்களில் இருந்து காத்துக் கொள்வது பற்றி ஆலோசனை சொல்கிறார் டாக்டர் முத்து செல்லக்குமார்.

வைரஸ் கிருமிகள் மிகவும் நுண்மையானவை. அவற்றின் ஆன்டி ஜீன்கள் அடிக்கடி மாற்றம் அடைவது, புதிய அவதாரம் எடுப்பது போன்ற காரணங்களால் வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது.

இந்தியா வெப்ப நாடாக இருப்பதால் இங்கு அம்மை நோய் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரசால் சின்னம்மை நோய் ஏற்படுகிறது. பாராமிக்ஸோ குடும்பத்தை சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரஸ் தட்டம்மையை ஏற்படுத்துகிறது.

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் வியர்குரு போல சிறிய கொப்புளங்கள் தோன்றும்.

பின்னர் பெரிதாகி நீர் கோர்த்துக் கொள்ளும். நிறம் மாறி கொப்புளங்களில் இருந்து நீர் வடிந்த பின்னர் வறண்டு உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும்.

உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி போன்ற பிரச்னைகள் உண்டாகும். ஒரு வாரத்தில் கொப்புளங்கள் உலர்ந்து விடும். இந்த அம்மை நோய் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும்.

மேலும் கொப்புளம் குணமாகும் வரை இருமல் மற்றும் தும்மல் மூலமாக இந்நோய் பிறருக்கு பரவ வாய்ப்புள்ளது.

சின்னம்மை தானாகவே குணமாகும் அல்லது தக்க மருந்துகளை பயன்படுத்தி குணப்படுத்த லாம். அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சிலருக்கு நிமோனியா அல்லது மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.

கரு தரித்த பெண்களுக்கு சின்னம்மை ஏற்படும்போது கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். குழந்தைக்கு பார்வைக் குறைபாடு, தலை சிறிதாக இருத்தல், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சின்னம்மை எளிதில் பரவும்  என்பதால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் வருகிறது. சின்னம்மை ஒருவரது வாழ்வில் ஒரு முறை வந்து விட்டால் மீண்டும் வர வாய்ப்பில்லை. 

வாழ்நாள் முழுவதும் இந்த அம்மை நோய்க்கான தடுப்பாற்றல் உடலில் ஏற்பட்டு விடும். சின்னம்மை இது வரை வராத பெரியவர்கள் மற்றும் ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தட்டம்மை தாக்குகிறது. பொதுவாக அம்மை நோயை முழுமையாக குணப்படுத்தவும், வைரஸ் கிருமிகளை அழிக்கவும் மருந்துகள் கிடையாது.

அம்மை நோயால் உடலில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி, அரிப்பு போன்ற பாதிப்புகளைக் குறைத்து, நோய் அறிகுறிகளைப் போக்குவதற்கான மருந்துகள் மட்டுமே உள்ளன.

பாதுகாப்பு முறை: வழக்கமாக அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால், வேப்பிலையை தலைமாட்டில் வைத்து படுக்க வைத்து விடுகின்றனர். அம்மைக் காலத்தில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி மற்றும் அரிப்புக்கு மருந்து எதுவும் எடுத்து கொள்வதில்லை.

மேலும் சத்தான உணவு உட்கொள்வதும் இல்லை. இதனால் அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். போதுமான ஓய்வு மற்றும் தூக்கமின்மையால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இவற்றை தடுக்க வேண்டியது அவசியம். அம்மையால் ஏற்படும் உடல் பிரச்னைக்கு மருந்து தருவது தெய்வ குற்றம் என்று நினைக்கும் மனநிலை மாற வேண்டும்.

அம்மை நோய் தாக்குவதைத் தடுக்க குழந்தைகளின் ஒன்பதாவது மாதத்தில் இருந்து தடுப்பூசி போட வேண்டும். அதன் பின்னர் குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் போது எம்.எம்.ஆர். எனப்படும் முத்தடுப்பு ஊசி போட வேண்டியதும் அவசியம்.

இதில் தட்டமைக்கான தடுப்பூசியும் அடங்கும். சின்னம்மை தடுப்பூசி ஒரு வயது முடிந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் போடலாம்.

தடுப்பூசிகளை சரியாகப் போடுவதன் மூலம் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். முறையான மருத்துவம் மற்றும் உணவு முறைகளைப் பின்பற்றி பெரிய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்


திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.
குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.
குழந்தைகள் வளர்ச்சிக்கு: வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான்.
கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.
இரத்த விருத்திக்கு: எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
உடல் வலி குணமாக: பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.
மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு: மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.
குடல்புண் ஆற: அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.
இதயத் துடிப்பு சீராக: சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.
சுகமான நித்திரைக்கு: தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும். தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.
உலர்ந்த திராட்சை உண்போர் கவனத்திற்கு: சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.
உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர். எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.
குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரே கொடுக்க வேண்டும்.

Thursday, August 18, 2011

புகை பிடிக்கும் பெண்களுக்கு இதய நோய் பாதிப்பு அதிகம்


புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் ஆண்களைவிட பெண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் யுனிவர்சிட்டி ஆப் மின்னசோட்டா ஆராய்ச்சியாளர்கள், 1966 முதல் 2006 வரையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட 24 லட்சம் பேரின் தகவல்களை திரட்டினர்.

அவர்களது புகைப் பழக்கம் பற்றி ஆராயப்பட்டது. புகைப் பழக்கத்தால் ஆண்களைவிட பெண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 25 சதவீதம் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனினும், இதற்கான காரணங்கள் தெரியவில்லை. புகைப்பவர்களில் ஆண்களைவிட பெண்களுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதற்கான காரணங்களை ஆராய்வதற்காக, 40 லட்சம் பேரின் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் அடிப்படையில், சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு இதய நோய் பாதிப்பு அதிகம் என்பதை பெண்களுக்கு உணர்த்தும் வகையில் சிகரெட் உற்பத்தியாளர்களுக்கான விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதாவது, சிகரெட் பாக்கெட்டிலேயே இதுபற்றி விளம்பரம் செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.

உலகம் முழுவதும் 110 கோடி பேர் புகைப் பிடிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புகையால் ஆண்டுக்கு 50 லட்சம் பேர் பலியாவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதேநிலை தொடர்ந்தால் இந்த எண்ணிக்கை 80 லட்சமாக அதிகரிக்கும் என்றும், இதில் 25 லட்சம் பெண்களாக இருப்பார்கள் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Wednesday, August 17, 2011

புகைப்பழக்கத்தை மறக்கச் செய்யும் சூரியகாந்தி விதைகள்


நாடு முழுவதும் பரவலாகப் பயன்படும் சூரியகாந்தியின் முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டவை. உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் மருத்துவ பயன்களும் சூரிய காந்தியின் விதைகளில் அடங்கியுள்ளன. இன்றைக்கு தமிழ்நாட்டில் 80 சதவிகித சமையலறையை சூரிய காந்தி விதை எண்ணெய் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

சப்போனின்கள்-ஹீலியான்தோஸைடுகள்,A,B&C லினோலிக்,மிரிஸ்டிக்,பாலிமிட்டிக், ஒலியாக்,ஸ்டீரியக் அமிலம்,வைட்டமின்கள் A,D,மற்றும் E காணப்படுகின்றன. விதைகளில் அசிட்டோன்,ஃபார்மிக் அமிலம் மெத்தில் ஆல்கஹால் காணப்படுகின்றன.

கொழுப்புச் சத்து குறையும்

சீதபேதியை குணப்படுத்தும்.காய்ச்சல், வயிற்றுவலி, வலியுடன் சிறுநீர்கழிதல், கண்வலியுடன் வீங்குதல், மண்ணீரல், கோளாறுகள், புண்களை ஆற்றும்.

விதைகள் பாக்டீரியா கொல்லிகள். சிறுநீர் கழிவை அதிகரிக்கும். கபம் வெளியேற்றும், காய்ச்சல் தணிக்கும், இருமல் ஜலதோஷத்திற்கு பயன்தரும். காற்று குழாய்,பேச்சுக்குழாய், மற்றும் நுரையீரல் பாதிப்புகளை குணப்படுத்தும். எண்ணெய் அதிக கொழுப்புச்சத்தை குறைக்கும்.

ரத்த அழுத்தம் கட்டுப்படும்

விதையில் உள்ள பொட்டாசியம் சத்து மிகுந்த பயனளிக்கக் கூடியதாகும். ஒரு கோப்பை சூரிய காந்தி விதையில் ஆயிரத்து 300 மில்லி கிராம் பொட்டாசியம் காணப்படுவதாக உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை உபயோகிப்பதன் மூலம் பக்கவாத நோய் தாக்குதலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதும் தடுக்கப்படுகிறது.

கால் கோப்பை சூரிய காந்தி விதையில் 32 சதவிகிதம் மெக்னீசியம் காணப்படுகிறது. இது நரம்பு செல்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தசை தொடர்பான நோய்கள் வராமல் தடுப்பதில் மெக்னீசியத்தின் பங்கு முக்கியமானது. இதயம் தொடர்பான நோய்கள், இரத்த அழுத்தம் போன்ற நோய்களையும் சூரிய காந்தி விதைகள் கட்டுப்படுத்துகின்றன. ஆஸ்துமா தொடர்பான நோய்களையும் குணப்படுத்துகின்றன.

மெனோபாஸ் டென்சனை குறைக்கும்

இதில் உள்ள வைட்டமின் ஈ உயிர்சத்தும், ஆன்டி ஆக்சிடண்டும் உடல் மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்தினை குறைக்க உதவுகிறது. நீரிழிவு மற்றும் புற்றுநோய்களை கட்டுப்படுத்துகிறது. பெண்களின் மெனோபஸ் கால டென்சனை குறைக்க உதவுகிறது.

புகைப்பழக்கத்தை மறக்கடிக்கும்

ஆண்டுகணக்கில் சிகரெட் புகைப்பவர்களை அந்த பழக்கத்தில் இருந்து விடுவிப்பதில் சூரிய காந்தி விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கறுப்பு தோலை நீக்கிய சூரிய காந்தி விதைகளை சில நாட்கள் தொடர்ந்து மென்று தின்று வந்தால் சிகரெட் புகைக்க வேண்டும் என்ற பழக்கம் மறந்து விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tuesday, August 16, 2011

சிறுநீரக கோளாறுக்குக் சிறந்தது மாவிலங்கம்


எமது நாட்டைச் சார்ந்த இலையுதிர் மரம் மாவிலங்கமாகும். இது ஆற்றங்கரை ஓரங்களில் அதிகமாக காணப்படும். இந்த மரத்தின் இலைகள் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலையாகும். மாவிலங்கத்தின் இலைகளும், பட்டையும் மருத்துவ பயன் கொண்டவை.

கி.மு 8ம் நூற்றாண்டிலேயே ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளில் மாவிலங்கத்தின் மருத்துவ பயன்பாடு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி 1100ம் ஆண்டு முதல் சிறுநீரகக் கல் போக்க இந்திய மருத்துவத்தில் முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

இத்தாவரத்தில் சபோனின்கள், பிளேவனாய்டுகள், தாவரஸ்டீரால்கள் மற்றும் குளுக்கோசிலினேட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள் வருனால், ரூட்டின், சிட்டோஸ்டிரால், பெட்டுலினிக் அமிலம், குளுக்கோகப்பாரின், கெடா பிசைன் போன்றவை காணப்படுகின்றன.

அலர்ஜிக்கு மருந்து

மாவிலங்கப் பட்டை ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, மற்றும் தோல் வியாதிகளை குணப்படுத்தும். மேலும் காய்ச்சல் வயிற்று எரிச்சல், வாந்தி ஆகியவற்றினையும் போக்கும். மூட்டுக்களின் வீக்கம் மற்றும் புண் போக்க பசுமை இலைகள் உதவுகின்றன. கசக்கிய இலைகளை வினிகள் சேர்த்து பயன்படுத்துவர்.

முகவாதத்தை குணமாக்கும்

குளிர்காலத்தில் பனிக்காற்று தாக்குவதினால் ஏராளமானோர் முகவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாவிலங்கம் அருமருந்தாகும். மாவிலங்கு மரப்பட்டை ,மூக்கிரட்டைப் பட்டை வேர், வெள்ளைச் சாரணை வேர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு இடித்து முதல் நாள் இரவில் 250 மில்லி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி அளவு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் 60மில்லி கிராம் `நண்டுகல் பற்பம்’ சேர்க்க வேண்டும்.

தினமும் பல் துலக்கியதும், இதை அருந்தி வர இரண்டு, மூன்று மாதங்களில் நிரந்தர குணம் ஏற்படும்.

சர்க்கரை நோயாளிகளை துன்புறுத்தும் பிரச்சினை `தோள்பட்டை உறைவு’. இந்த நோய்க்கான காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையையும் மாவிலங்கம், மூக்கிரட்டை, வெள்ளைச் சாரணை வேர், நண்டுகல் பற்பம் மூலம் இரண்டு மாதங்களில் குணப்படுத்த முடியும்.

சிறுநீரக கற்களை வெளியேற்றும்

சிறுநீரகக் கற்களை நீக்க மேலை நாடுகளிலும், இந்தியாவிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சிறுநீருடனேயே கல் வெளிவருவது போன்று உதவுகிறது. இன்றைய நவீன ஆய்வுகள் இதனை நிரூபித்துள்ளன. சிறுநீர்ப்பையில் வீக்கம், சிறுநீர்க்குழாய் அடைப்பு மற்றும் இனபெருக்க உறுப்புடனான சுரப்பியில் அதிக வளர்ச்சியினால் ஏற்படும் சிறுநீராக கோளாறுகளை குணப்படுத்துகிறது.

பாரம்பரியமாக கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட தாவர மருந்தின் அதே பயன்பாடு அதே நோய்களுக்கு ஏற்றது என்று நிறுவப்பட்டதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மாவிலங்கம்.

Monday, August 15, 2011

கொத்தமல்லி


உலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூலிகைகளே.  நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கள், கனிகள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் மருத்துவப் பயன் கொண்டவையாகும். 

  மக்கள் பிணி நீங்கி  நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும், இந்த மூலிகைகள் நமக்கு உதவு கின்றன.  இதனையே நாம் கற்ப மூலிகைகள் என்று அழைக்கிறோம்.  மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்து உண்ணும் வழக்கம் தென்னிந்தியாவிற்கே உரிய சிறந்த பழக்கமாகும். 

   கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும்.  இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால் வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களும் சேர்க்கப் படுகிறது என்பதை அறிந்திருக்க மாட்டோம்.
   
    நம் முன்னோர்கள் உணவின் மூலமே நோயற்ற வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதற்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவை சாட்சிகள்.
கடையில் காய் வாங்கினால் ஏதோ கொசுறாக கொத்தமல்லித் தழையைக் கொடுப்பார்கள்.  அதை நாமும் வாங்கி பயன்படுத்துவோம்.  ஆனால் அதிலுள்ள மருத்துவப் பயனைஅறிந்ததில்லை.

  பசுமையான, மணமுள்ள இலைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் உருண்டையான விதைகளையும் உடைய சிறு செடி கொத்தமல்லி.  இதன் விதைகளுக்கு தனியா என்று பெயர்.  இது பலசரக்குக் கடைகளில் கிடைக்கும்.

   நஞ்சை, புஞ்சை காடுகளிலும் இதனைப் பயிரிட்டு வளர்க்கின்றனர்.  இதன் விதை மிகவும் மருத்துவப் பயன் கொண்டது.   இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் உடையவை.  இது இந்தியா முழுவதும் பணப்பயிராகப் பயிரிடப் படுகிறது.

   இது கார்ப்புச் சுவை கொண்டது.  குளிர்ச்சித் தன்மையுடையது.  சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயுவகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பயன்களைக் கொண்டது.


கொத்தமல்லியின் பயன்கள்
·   சுவையின்மை நீங்கும். 
·   வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.
·  செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணிக்கச் செய்யும்.
· வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும்.  மலச்சிக்கல் நீங்கும்.   இதில் உள்ள நார்ச்சத்து மலக்குடலில் உள்ள தேவையற்ற அசடுகளை வெளியேற்றும்.  மூலநோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.
·   புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.
·  கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்  கண் சூடு குறையும்.
·   சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும்.  மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.
· உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல்.  இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.  இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.
· நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.  மன அமைதியைக் கொடுக்கும்.
· உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.  விந்துவைப் பெருக்கும் குணம் இதற்குண்டு.
· நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும்.  இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும்.  இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
·   வாய் நாற்றத்தைப் போக்கும்.  பல்வலி, ஈறுவீக்கம் குறையும்.
சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.


  கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.
5 கிராம் கொத்தமல்லி விதையை இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.

   கொத்தமல்லி கீரைக்கும், விதைக்கும் கண்பார்வையைத் தூண்டும் குணம் உண்டு.
   காய்ச்சலாலும், குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால் நாவில் சுவையின்மை ஏற்படும்.  இது பொதுவாக பித்த அதிகரிப்பினால் வருவது. 
   இதற்கு, கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கஷாயம் செய்து அருந்தினால்  சுவையின்மை நீங்கி, பித்த கிறு கிறுப்பு நீங்கும்.

Friday, August 12, 2011

ரம்புத்தான் பழம்


ரம்புத்தான் பழம் இது ஒரு வெப்ப மண்டல பழம் தென்கிழக்கு ஆசிய தீவுகளில் பிறப்பிடமாக கொண்ட, பழங்குடியினருக்கு சொந்தமான ஒரு வெப்ப மண்டல தாவரம் ஆகும். ரம்புத்தான் என்ற வார்த்தைக்கு தோல் போன்ற முடி என்று பொருள்.

   இது ஆப்பிரிக்கா, கம்போடியா, கரீபியன், மத்திய அமெரிக்கா, இந்தியா, இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற வெப்ப மண்டல பகுதிகளில் ஏராளமாக உள்ளன.  தமிழ்நாட்டில் கொடைக் கானல் பகுதியில் விளைகிறது.
     இந்த பழங்களில் அதிக மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. தற்போது பழங்களை அதிகம் சாப்பிடாமல் இரசாயனம் கலந்த குளிர்பானங்களை விரும்பி அருந்து கின்றனர். இவை உடலுக்கு பல தீங்குகளை இழைக்கக்கூடியது. அதனால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கும் பழங்களை சாப்பிட்டு வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

    ரம்புத்தான் பழத்தின் புறத்தோல் இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும். இதன் மேற்புறத்தில் மென்மையான முடிகள் போன்று காணப்படும். இதனை பாதியாக மேல் தோலை நீக்கினால் சதைப்பகுதி காணப்படும். இதுவே சாப்பிடும் பகுதியாகும். இதனுள் விதை சற்று நீள்வட்ட வடிவில் காணப்படும். ரம்புத்தான் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடியது.

    இப்பழம் பனை நுங்கு போன்று இருக்கும். ரம்புத்தான்  பழங்களின் சர்க்கரை அளவு பழங்களின் சதையின் ஒவ்வொரு 100 கிராமுக்கும் நீர்ச்சத்து - 82.3 கிராம், புரதம் - 0.46 கிராம், கார்போஹைட்ரேட் - 16.02 கிராம், சர்க்கரை - 2.9 கிராம், நார்சத்து - 0.24 கிராம், கால்சியம் - 10.6 மி.கிராம், பாஸ்பரஸ் - 12.9 மி.கிராம்,
அஸ்கார்பிக் அமிலம் - 30 மி.கிராம் உள்ளது.

   ரம்புத்தான்  வளர்ச்சி நீர் கிடைப்பதை பொறுத்து புதிய கிளைகள் மற்றும் இலைகள் உருவாக்கும். திராட்சை போல சிறிது ஒன்றாக குழுவாக இருக்கும். வளர்ச்சி நிலையை பொறுத்து சதை, வெவ்வேறு சுவையை கொண்டிருக்கும், ரம்புத்தான் அதிக அமில எனினும், லிச்சி ஒத்த ஒரு, இனிப்பு, புளிப்பு மற்றும் மணம் சுவை, கொண்டிருக்கிறது.

   இப்பழத்தை மதிய வேளையில் சாப்பிட்டு வருவது நல்லது. இரவு நேரங்களில் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும். இதனால் இரவு நேரங்களில் இப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
ரம்புட்டான் சாப்பிட முன்னர் பழங்களை நன்கு அலசிக் கழுவ வேண்டும். இரண்டு தடவைகளாவது கழுவ வேண்டும். அல்லது ஓடும் நீரில் கழுவ வேண்டும்.

கழுவிய பின்னரும் கூட ரப்புட்டான் தோலை வாயினால் கடிக்க வேண்டாம்.
 கத்தியினால் தோலை வெட்டி அகற்றிய பின்னர் மீண்டும் கைகளை நீரினால் கழுவி அதன் பின்னரே சுளைகளை உண்ணுங்கள்.

இவ்வாறு சுத்தப்படுத்திய பின்னர் நாம் சாப்பிடுவதால் நோய்கள் எதுவும் வராது. உள்ளிருக்கும் சுளைகள் சுத்தமானவை.

Thursday, August 11, 2011

லிச்சி பழம்


லிச்சி பழம் நாம் அதிகம் அறியப்படாத பழம், இருந்தாலும் பெரிய பழக்கடைகளில் இந்த சத்தான பழம் கிடைக்கிறது. சீனாவை  பூர்விகமாகக் கொண்ட இந்தப்பழம், இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளிலும் அதிகமாக விளைகிறது. இவை தவிர நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, லெபனான், கனடா, ரஷ்யா மற்றும் ஏமன் நாடுகளில் இந்தப் பழம் விளைகிறது. லிச்சி மரங்களை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வளர்ப்பதற்கான சூழ்நிலை இருக்கிறது  இந்தப் பழம் கொடைக்கானலில் கிடைக்கிறது. 'லிச்சிப் பழத்தில் ஒயின் தயாரிக்கப்படுகிறது.

   பலாப்பழம் போல வெளிப்புறம் பரபரவென கூர்மையான சிவப்பு நிற தோலைக் கொண்டிருக்கும். உள்புறம் நுங்கு போல கொழுகொழுவென இருக்கும் இந்தபகுதிதான் சாப்பிடக்கூடியது. இது இனிப்புச் சுவையுடன் இருக்கும். உடலுக்கு சக்தி அளிக்கக்கூடியது. பழத்தின் உள்ளே, 2-3 செ.மி., நீலத்தில் கொட்டை இருக்கும். அதை சாப்பிடக்கூடாது. லிச்சி பளத்திள் கொழுகொழு சதைப்பகுதிதான், சத்துகளின் இருப்பிடம்.

    இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் தோல், எலும்புக்கு நல்லது. கோடை காலத்தில் நோய் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடியது. அதிக கலோரி இல்லாதது என்பதால், நீர்ச்சத்து மிகுந்தது முடியும் அளவு சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால் மலச்சிக்களைப் போக்குகிறது.

   இதில் உள்ள நியாசிந், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகளைக் குறைக்கும். கோடை காலத்தில் அதிகமாக விற்பனைக்கு வருகிறது.
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் கண்ணைக்கவரும் ரோஸ் நிறத்திலான லிச்சி பழங்களை பழ வியாபாரிகள் தற்போது வடமாநிலங்களிலிருந்து கொண்டு வந்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் விற்பனை செய்து வருகிறார்கள். ஏன் லிச்சி மரம் தமிழ்நாட்டில் வளர்க்க முடியாததா? லிச்சி மரங்களை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வளர்ப்பதற்கான சூழ்நிலை இருக்கிறது.

லிச்சி பழத்தின் ஆரோக்கிய தன்மை

இதனை தோட்டம், வீடுகளில் வளர்த்தால் பருவத்தில் ருசியான லிச்சி பழங்களை ஏராளமாக பெறலாம் என்கிறார் விவசாயத்துறையில் ஆய்வு செய்து வரும் முனைவர் ராஜ்பிரவீண்.
லிச்சி மரங்கள் எந்த மண்ணில் வளரும்? எப்படி பராமரிப்பது என்பது பற்றிய சாகுபடிக்குறிப்புகளை அவர் கூறுகிறார். காலம்காலமாக  மண்ணில் ஒரே சாகுபடியை செய்து நொந்து நூலான விவசாயிகள் இந்த புதிய வரவை தங்கள் மண்ணில் பதித்து காசு பார்க்கலாம். இதோ....

" தற்போது சில தனியார் நிறுவனங்களும், விவசாயிகளும் லிச்சி பழ சாகுபடியில் இறங்கி வருகிறார்கள். காரணம், மாம்பழங்களுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்பு இருப்பது போல்,லிச்சிபழத்திற்கு உள்நாட்டில் பலத்த வரவேற்பிருக்கிறது. குறிப்பாக இந்த பழத்தை பயன்படுத்தி பதப்படுத்திய பழச்சாறு உள்ளிட்ட சில பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார்கள். தற்போது தமிழ்நாட்டில் லிச்சி பழத்திற்கான வரவேற்பு அதிகம். இதற்காக இந்த பழங்களை வியாபாரிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். ஆனால் இதற்கு அவசியமே இல்லை. தமிழ்நாட்டின் பல இடங்களில் லிச்சி மரங்களை வளர்க்க முடியும்.

பொதுவாக வடமாநிலங்களில் லிச்சி மரங்களை மரத்துக்கு மரம் 9 மீட்டர் இடைவெளியில் நடுகிறார்கள். ஆனால் இதனை 7 மீட்டர் இடைவெளியில் நடவு செய்வதன் மூலம் 1 எக்டரில் கூடுதலாக மரங்களை நடமுடியும். அதாவது எக்டருக்கு 200 முதல் 300 மரங்களை நடலாம். நடவு செய்யும் முன் தோட்ட நிலங்களை நன்றாக கொத்தி கிளறி உழுது விட்டு பின்னர் இந்த குழிகளில் இயற்கை உரங்களை கொட்டி வைக்க வேண்டும். பின்னர் அந்தந்த பகுதியின் சீதோஷ்ண நிலைக்கு தகுந்த லிச்சி மரக்கன்றுகளை வாங்கி குழிகளில் நடலாம். குறிப்பாக சீனா, பம்பாய், கொல்கத்தா, க்ரீன் போன்ற லிச்சி கன்று ரகங்கள் தமிழ்நாட்டின் தட்பவெப்பத்தை தாங்கி வளரக்கூடியவை.

இந்த ரகங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு தேர்வு செய்து நட்டபின் அவை வளரத் தொடங்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு மாத இடைவெளியிலும் ஒரு கிலோ தழைச்சத்து, அரை கிலோ மணிச்சத்து மற்றும் ஒரு கிலோ சாம்பல் சத்து உரங்களை இடவேண்டும். வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்சவதும் அவசியம். லிச்சி மரக்கன்றுகள் கொஞ்சம் பெரிதான உடன் 15 நாட்களுக்கு ஒரு தடவை நீர்பாய்ச்சலாம். கன்றுகள் செழுமையாக வளர்ச்சி பெற்ற நிலையில் 5 கிலோ ஊட்டமேற்றிய உரம், 150 கிராம் தழைச்சத்து, 150 கிராம் மணிச்சத்து மற்றும் 150 கிராம்  சாம்பல் சத்தை மண்ணுடன் கலந்து விட வேண்டும்.

லிச்சி மரங்கள் வளர்ந்த 7 முதல் 9 ஆண்டுகளில் பலன் கொடுக்க தொடங்கும். பழங்கள் காய்க்க தொடங்கும். இந்த நேரத்தில் 100 கிலோ ஊட்டமேற்றிய தொழுஉரம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 2 கிலோ தழைச்சத்து, 2 கிலோ மணிச்சத்து, 800 கிராம் சாம்பல் சத்து ஆகியவற்றை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.லிச்சிமரங்களுக்கு இடையே ஊடுபயிராக முட்டைகோஸ், வெங்காயம், உருளைக்கிழங்கு, வெண்டை,  கிளாடியோஸ் மரம் ஆகியவற்றை பயிர் செய்யலாம். இதனால் கூடுதல் வருமானம் உறுதி. நன்றாக வளர்ந்த மரத்திலிருந்து, சாதாரண ரகங்களில் கூட ஒரு அறுவடைக்கு 80 கிலோ முதல் 90 கிலோ வரை மகசூல் கிடைக்கும். நல்ல ரக கன்றுகளாக இருந்தால் 100 முதல் 110 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

இந்தியாவில் விளையும் பழவகைகளில் லிச்சிக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரிய அளவில் கிராக்கி உள்ளது. இதனால் மரம் அறுவடைக்கு தயாராகும் போதே காசு கைக்கு வர வாய்ப்பிருக்கிறது. தற்போது லிச்சி பழத்திலிருந்து பல மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. லிச்சியின் பழச்சாறு, லிச்சி ஸ்குவாஷ், லிச்சி இனிப்புகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. லிச்சி தோட்டங்களில் தேனீ வளர்ப்பு செய்யலாம். இதுவும் கூடுதல் வருமானத்துக்கு வழிவகுக்கும். எனவே தென்மாவட்டங்களில் லிச்சி பழ தோட்டங்களை உருவாக்குவதன் மூலம் விவசாயிகள் லாபகரமான எதிர்காலத்தை நோக்கி பயணத்தை தொடங்குகிறார்கள் என்று சொல்ல முடியும் என்கிறார் முனைவர் ராஜ்பிரவீன்.

வீடுகளில் லிச்சியை வளர்க்க விரும்புபவர்கள் உங்கள் மாவட்டங்களில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் இந்த மரத்தின் கன்றுகளை பெற முடியும். அணுகி கேளுங்கள்.


இதயத்திற்கும், ஈரலுக்கும் பலம் தரும் லிச்சி!

  • இதயமும், ஈரலும் உடலின் பிரதான பாகங்கள். இந்த இரண்டு உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிக்கு முதலிடம். 
  • பொதுவாக லிச்சி மரத்தின் பழம், விதை, பூ, வேர்ப்பட்டை ஆகிய அனைத்துக்கும் மருத்துவ பயன்பாடு அதிகம். 
  • லிச்சி பழம் இனிப்பான ரோஜா மலரின் வாசனை தரும். பழத்தை தினமும் உண்டு வந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பாப வேலை செய்யும். 
  • ஈரல் உடலின் பல்வேறு விஷங்களால் நொந்து போயிருக்கும். லிச்சியின் பழச்சாறு இந்த விஷத்தன்மையை குறைத்து ஈரலுக்கு உரம் ஊட்டும். 
  • தாகத்தை தணிக்கும். 
  • இந்தோனேஷியாவில் இதன் விதைகளை குடல்சார்ந்த நோய்களை குணப்படுத்தவும், மலேசியாவில் நரம்பு நோய்களை சரிப்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள். 
  • இதன் பூக்களும், வேர்ப்பட்டையும் தொண்டையில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்க பயன்படுகிறது.
  • புகைபழக்கம், பாக்கு பழக்கத்தினால் தொண்டைப்பகுதியை ரணப்படுத்தியிருப்பவர்கள் லிச்சி பழங்களை உண்பது நலம். 
  • சீனாவில் பூச்சிகடித்து விட்டால் லிச்சி மரத்தின் இலைகளை சாறு எடுத்து பிழிந்து விடுகிறார்கள்.
  • லிச்சி பழத்தில் உடலின் கட்டுமான உணவு என்று சொல்லப்படும் புரதம் 1.1 கிராம், 
  • தோல்தடிப்பாயும், சொரசொரப்பாகவும் மாறும் தவளைசொறி நோயை கட்டுப்படுத்தும் தாவர கொழுப்பு 0.2 கிராம், 
  • இன்றைக்கு பலருக்கும் அன்றாட பணியில் சிக்கலை ஏற்படுத்தும் மலச்சிக்கலை கட்டுப்படுத்தி குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும் நார்ப்பொருள் 0.5 கிராமும், எலும்பு, பல் பலம் பெற உதவும் கால்சியம் 10 மில்லிகிராமும், கால்சியம் உடலில் சேர உதவும் பாஸ்பரஸ் 35 மிகி, உடல் வெளுத்து போவதை தடுத்து நிறுத்தும் இரத்த சிவப்பணுக்களின் கட்டமைப்புக்கு முக்கியமான இரும்பு சத்து 0.7 மிகி, 
  • நாக்கு வீங்குவது, சிவந்து பிளவுபடுதல், வாய்ஓரங்களில் வெடிப்பு உண்டாவதை தடுத்து நிறுத்தும் ரைபோபிளேவின் 0.06 மிகி, 
  • சளி உருவாகாமல் தடுத்து தலைசுற்றல், கிறுகிறுப்பை தடுக்கும் வைட்டமின் சி 31 மிகி, மக்னீசியம் 10 மிகி, பொட்டாஷியம் 159 மிகி, தாமிரம் 0.30 மிகி களோரின் 3 மிகி உள்பட எராளமான சத்துக்கள் லிச்சி பழத்தில் தாராளமாக உள்ளன. 
  • அவ்வப்போது இதனை உணவில் சேர்த்துக் கொண்டால்..உடல்நலன் நிச்சயம் நன்றாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.

Monday, August 8, 2011

கரும்பு

 சித்த வைத்தியத்தில் கரும்பின் வேறு பெயர்களாக புனற்பூசம், இக்கு, வேய் என அழைக்கப்படுகிறது. மருத்துவப் பயன்பாட்டுக்கு கரும்புச்சாறு, சர்க்கரை, வேர் பயனாகிறது. இவை இனிப்பு சுவையுடையது. குளிர்ச்சித் தன்மை கொண்டது.
கரும்புச்சாறு : இதன் சாற்றை அதிகமாக சாப்பிட்டால் சந்தேக நோயுண்டாகும். மிதமாக சாப்பிட்டால் வெள்ளை, அழற்சி பெருக்கு அடங்கும்.
செங்கரும்பின் சாறு : இதன் சாறு பித்தத்தைக் குறைக்கிறது.
நல்ல வெல்லம் : இது பித்தத்தைப் போக்கிடும். வயிற்றுப் புழுக்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும்.
பழுப்புச்சர்க்கரை : கரும்பின் சாற்றைக் காயச்சி சர்க்கரை செய்யப்படுகிறது. இது மருந்துகளுக்குத் தேவையாயுள்ளது. வாந்தி, பித்தம், சுவையற்ற தன்மையைப் போக்குகிறது. கெட்டியான சளியைக் கரைத்து சுகம் தருகிறது.
சீனிச்சர்க்கரை : இது வாத ஜுரம், வாத நோய், நுண்மையான புழு, விக்கல்களை நீக்குகிறது.
கற்கண்டு : சர்க்கரையைக் கொண்டு கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் சிறிதளவு எடுத்து சிறிதளவு பொரிகாரம் சேர்த்து 7 தினங்கள் சாப்பிட்டு வந்தால், விந்து நீர்த்தல் நீங்கும். மேலும் பல்லரணை, (ஈறு தடிப்பு) இருமல், வாந்தி ஆகியவை தீரும்.
சாறு : மிகவும் இனிப்பாக இருக்கும். விக்கலை நிறுத்தும். உடம்பு எரிச்சலைத் தணிக்கும். இதனுடன் தயிரும் சேர்த்துக் குடிக்கலாம்.
சர்க்கரை : சர்க்கரையைப் பாகு செய்து உணவுப் பொருட்களை நெடுநாள் சேமித்து வைக்கலாம். ஜலதோஷம், நீர்ப்பீனிச நோய்களைப் போக்கவும் தரலாம்.
* செம்பு, வெள்ளப் பாஷாணம் முதலிய விஷப்பொருட்களை சாப்பிட்டால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து சர்க்கரை மிகச் சிறப்பான விஷமுறிப்பாக செயல்படுகிறது.
* ஆறாத புண்களையும் குணமாக்க வழங்கப்படுகிறது.
* மஞ்சள் பெழுகும், சர்க்கரையும் சேர்த்து குழம்பாக்கி பருக்களின் மீது தடவி வந்தால் குணமாகிறது.
* கண்களில் தூசு, வலி, இரணம், நோய் ஆகியவற்றிற்கு சர்க்கரை ஒரு பங்குக்கு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து கரைத்து ஒரு மணி நேரத்துக்கு 2 சொட்டு கண்களில் விட்டுவந்தால் நோயின் தாக்கம் குறையும்.
மேலும், இவற்றிற்கு இரவில் கண் இமைகளுக்கு சிற்றாமணக்கு நெய், ஓரங்களில் தேய்த்து, கண் இமை ஒட்டிக் கொள்ளாதபடி செய்வதுடன், காலையில் வெதுவெதுப்பான பாலும், நீரும் சேர்த்து கண்களைக் கழுவி வரவேண்டும்.
* நெடுநாள் நோயாளிகளாக உள்ளவர்களின் படுக்கை அறையில் சர்க்கரையை போட்டு புகையை ஏற்படுத்தினால் சுத்தமான காற்று ஏற்பட்டு அறை சுத்தமாகும்.
காடி : கருப்பஞ்சாற்றைப் புளிக்க வைத்தது காடி என அழைப்பர். இது பசியை உண்டாக்கி ஜீரணத்தை அதிகப்படுத்தும். தாகத்தைக் குறைக்கும். காடி ஒரு பங்கும், சுத்தமான நீர் 5 பங்கும் கலந்து ஈயம் போன்ற விஷங்களால் ஏற்படும் நோய்களுக்குத் தரலாம். இதற்கு முன்பு பேதிக்கு கொடுத்து அதன்பின் கையாள்வது நல்லது.
* தலைவலி, மயக்கம், தொண்டைப் புண், மூக்கில் நீர் ஒழுகல், ஆகியவற்றிற்கு இதன் ஆவியை நுகர வைத்தால் குணமேற்படும்.
* சிறுநீரில் இரத்தம் வெளியேறும் நோய்க்கு, காடியை தொடை, இடுக்கு ஆகிய இடங்களில் பூசினால் குணமாகும்.
* தேள், குளவி, தேனீ போன்றவை கொட்டினாலும், சில பயிர் பொருட்களின் உராய்வலால் ஏற்படும் தினவு, நமைச்சல் நோய்களுக்குப் பூசலாம். இதனைப் போன்றே மார்பக வீக்கத்தையும் கரைக்கலாம்.
ஆண், பெண் இணைப்பால் இரவில் உண்டாகும் மிகு வியர்வைக்கு கருப்பங்காடியை ஒரு பங்கு அளவும், நீர் இரண்டு பங்கு அளவும் கலந்து மார்பில் பூசி வந்தால் வியர்வை குறையும்.
வேர் : கரும்பின் வேரை முறைப்படி குடிநீரிட்டு கொடுத்து வந்தால் சிறுநீர் எரிச்சல் தணியும்.
கரும்பு
இதனை சரிபாதியாகப் பிளந்து திப்பிலிப் பொடி, ஏலக்காய்ப் பொடி இவற்றை நடுவாக வைத்து செம்மண் சீலையால் கட்டி கும்பி நெருப்பிலிட்டு பதமாகச் சுட்டு, பின்னர் சீலையை எடுத்து பின் பிழிந்து எடுத்த சாற்றினை விக்கலுக்குக் கொடுத்து வந்தால் தீரும். இதனைப் பல துண்டுகளாக வெட்டி, சுத்திகரிக்கப்பட்ட செம்புத்தூளை சட்டியிலிட்டு வறுத்து வெட்டிய துண்டுகளால் கடைந்தால் ஒருவகை பஸ்பம் உண்டாகும்.
இதனைச் செய்ய ஒரு பலம் செம்பு தூளுக்கு 4 கரும்புகள் கூட தேவையாகும். இதனைக் கொண்டு பல நோய்களைத் தக்க இணை மருந்துகளால் தீர்க்கலாம்.
யுனானி மருத்துவம்
கரும்பின் மருத்துவப் பயன்கள்
தோற்றம் : இது யாவரும் அறிந்த பிரபலமான ஒரு பொருளாகும். இது இரண்டு வகைப்படும். இதன் சாற்றிலிருந்து வெல்லம், சர்க்கரை, இனிப்பு மிட்டாய்கள் தயாரிக்கப்படுகிறது. இதன் ஒரு சிறந்தவகை ‘ப்போண்டா’ ஆகும். இது சாப்பிடுவதற்கு இனிப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.
இயல்பு : உஷ்ணம், ஈரம்.
முக்கிய குணங்கள் : இதயத்திற்கு இன்பமளிக்கிறது. வயிற்றிலுள்ள அசுத்தத்தை வெளியேற்றுகிறது. சிறுநீரைப் பிரியச் செய்கிறது. உடலுக்குச் சக்தியும், பருமனும் அளிக்கிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது.
பயன்படுத்தும் முறை
இதை அனைவரும் உரித்து சுவைத்துச் சாப்பிடுவார்கள். இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு சக்தியும், பருமனும் கிடைக்கிறது. தடைப்பட்ட சிறுநீரை வெளியேற்றும் தன்மை உடையதால், சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சலைத் தணிக்கிறது.
கரும்பை உரித்துத் துண்டு துண்டாக்கி பனியில் வைத்து விட வேண்டும். காலையில் இத்துண்டுகளைச் சாப்பிட்டால், சிறுநீர் கழிவதில் எரிச்சல், வெட்டை நோய் குணம்பெறுகிறது. சில நேரங்களில் சிறுநீரை அதிகளவில் வெளியேற்றும் தன்மையுடையதால் சிறுநீரகக் கற்களைக் கரைத்து வெளியேற்றுகிறது.

முக்கிய பயன்கள்
: உடலைப் பருமனடையச் செய்கிறது.
தீய விளைவுகள் : சளியை உண்டாக்கும்.
தீயவிளைவுகளைச் சரிசெய்யும் முறை : இத்துடன் அனீசூன் கலந்து பயன்படுத்த வேண்டும்.
சர்க்கரையின் மருத்துவ பயன்கள்

தோற்றம்
: சர்க்கரை யாவரும் அறிந்த ஒன்றாகும். சர்க்கரை பல பொருட்களிலிருந்து பெறப்படுகிறது. சர்க்கரையைப் பற்றி மட்டுமே இங்கு சொல்லப்படுகிறது. இது வெள்ளைச் சர்க்கரை, சிவப்பு சர்க்கரை என இருவகையாகக் கிடைக்கும். வெண் சாக்கரையை பாகுச் செய்து, காயவைத்து கற்கண்டு, பலவகையான மிட்டாய்கள் தயாரிக்கப்படுகிறது.
இயல்புகள் : வெண் சர்க்கரை - வெப்பம், சிவப்புச் சர்க்கரை-ஈரம், சிவப்பு சர்க்கரை வெண்சர்க்கரையை விடச் சற்று வெப்பமானது. நாளடைவில் சாக்கரையின் ஈரத்தன்மை குறைந்து வறட்சி மிகுந்துவிடும்.
முக்கிய குணங்கள்
சர்க்கரையானது நாற்றத்தை விலக்குகிறது. அழுகுவதைத் தடுக்கிறது. அதிகளவில் உட்கொண்டால் உடல் மென்மைப்படும். சிவப்புச் சர்க்கரை இலேசான வயிற்றுப் போக்கை உண்டாக்கும். வயிற்றுக்குச் சக்தியை அளிக்கும். வேக்காட்டை உண்டாக்கும். காயங்களில் தூவினால் அவை குளிர்ச்சியடைகின்றன. அழுக்கைப் போக்கும். எளிதில் செரிமானமாகாது.
மருந்து, லேகியங்களில் பூசணம் பூத்து விடமாலிருக்கவும், அதன் சுவை கெடாமல் இருக்கவும், சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளவும் சர்க்கரையை அதிகளவில் பயன்படுத்துவர். லேகியங்கள், முரப்பாக்கள், ஷர்பத்துக்கள் இவை சர்க்கரைப்பாகு கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
ஊறவைத்த மருந்துகளில் சர்க்கரையைக் கலந்து இன்சுவையுண்டாக்கிப் பருகக் கொடுப்பர். எளிய மலபந்தத்தை நீக்க சிவப்புச் சர்க்கரையைப் பாலில் கலந்து பருக வைப்பர். உணவு செரிமானமாக, உணவு உண்ட பிறகு சிறிதளவு சர்க்கரையை உண்பர். சாக்கரையை உணவில் அதிகம் பயன்படுத்தினால் சோம்பல் ஏற்படும். பருமனானவர்க்கு அதிக இரத்த உற்பத்தியில் உடல் சிவக்கும்.

தீய விளைவுகள்
: வெப்ப உடலினருக்கு இது தீமையை விளைவிக்கும். பாதாம், பால் போன்றவற்றால் இத்தீமையைப் போக்கலாம்.
சிறப்புப் பயன் : கல்லீரலுக்கு ஊட்டமளிக்கும்.

மாற்று மருந்து
: துரன்ஜபின்.
அளவு : வயிற்றுப்போக்கு உண்டாக்க 48 கிராம் முதல் 60 கிராம் வரை.
வெல்லத்தின் மருத்துவ பயன்கள்
தோற்றம்
: இது யாவரும் அறிந்த ஒரு பொருளாகும். கரும்புச்சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் பாகுவைக் காயவைத்துக் கைகளால் நிமிட்டினால் பொடியாகிவிடும். இதற்குச் சிவப்புச் சர்க்கரை என்று பெயர்.
இயல்பு : உஷ்ணம் - வறட்சி.
பழைய வெல்லம் - உஷ்ணம் - வறட்சி.
முக்கிய குணங்கள் : உடலுக்கு உஷ்ணத்தையும், மென்மையையும் அளிக்கிறது. சளியை வெளியேற்றுகிறது. உணவைச் சிறிதளவே ஜீரணிக்கிறது. வீக்கத்தைக் கரைக்கிறது. துர்நாற்றத்தைப் போக்குகிறது. பாகில் செய்யப்பட்ட லேகியங்கள் மற்றும் மூலிகை மருந்துகளைக் கெடாமல் பாதுகாக்கின்றது.

குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது. உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும். பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது.
இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பயன்படுத்தும் முறை
இது அதிகளவில் தின்பண்டமாகப் பயன்படுகிறது. குறிப்பாக சோர்வை நீக்கவும், வாய் வேக்காட்டைத் தணிக்கவும் உட்கொள்ளப்படுகிறது. வயிற்றுப் போக்கை உண்டாக்கும் மருந்துடன் கலந்து பயன்படுத்துவார்கள்.
உண்ட உணவு ஜீரணிக்க இதைச் சிறிதளவில் சாப்பிடுவார்கள். இதை அதிகளவில் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு உண்டாகும். வயிறும் உப்புசம் அடைந்துவிடும்.
வீக்கத்தைக் கரைக்கவும், புண்களில் உள்ள அசுத்தத்தை நீக்கவும், காயங்களை ஆற்றவும் இதைக்கொண்டு தயாரிக்கப்படும் களிம்பால் பற்றுப் போடப்படுகிறது. சக்தி வாய்ந்த மருந்து கெடாமல் இருக்க தேனுக்குப் பதிலாக இதன் பாகில் லேகியங்கள் தயாரிக்கப்படுகிறது.
அளவு : லேசாகப் பேதியை உண்டாக்க, மற்ற மருந்துகளுடன் 48 கிராம் முதல் 54 கிராம் வரை கலந்து பயன்படுத்தலாம்.


கரும்புக்கு பிற்காலத்தில் வேழம், கன்னல், கழை எனவும் பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. கழைக் கரும்பு என கீரன் எயிற்றியனார் என்னும் புலவர் வேறுபடுத்திக் காட்டியுள்ளார். கரும்பு புதர்செடி, இதற்கு நீர் மிகுதியாக வேண்டப்படும். அதனால் நீர்ப்பிடிப்பான வயல்களில் பயிரிடப்படுகிறது. இதில் பல கணுக்கள் காணப்படும். ஆடும் துணிக்கொடிகளைப்போல இருக்கும் என புலவர் உருத்திரங்கண்ணனார் பாடியுள்ளார்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்கள்

திருவெண்ணியில் உள்ள வெண்ணிக்கரும்பர் - அழகிய நாயகி கோயில் தலவிருட்சமாக கரும்பு வணங்கப்படுகிறது.
இது, கோயில் வெண்ணி இரயில்வே நிலையத்திலிருந்து 1/2 மைல் தொலைவில் உள்ளது. தற்போது இக்கற்கோயில் கோலிலுண்ணி என் அழைக்கப்படுகிறது.
அழகிய வேலைப்பாடுகள் அமைந்த இக்கோயிலில் உள்ள சுவாமி கருப்பங்கழிகளை ஒன்று சேர்த்து வைத்தது போல உருவம் கொண்டுள்ளது. இந்த லிங்கத்தில் கரும்பு போன்ற ரேகைகள் உள்ளன.
சுயம்பு லிங்கம், மிக அழகிய விக்கிரங்கள் உள்ளன. திருஞானசம்பந்தர், அப்பர் ஆகிய சமயக்குரவர்களால் பாடல் பெற்ற தலம். இது தஞ்சாவூர் கல்வெட்டுகளில் வெண்ணக் கூற்றம் எனக் குறிக்கப்பட்டுள்ளதாக குறிப்புகளில் காணக்கிடைக்கின்றன.
மேலும் திருவேடகம், ஆப்பனூர், திருமாணிகுழி, காஞ்சியிலுள்ள கரும்பூர் சிவ ஆலயங்களில் கரும்பு தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. மேலும், செங்கரும்பு கொள்ளிடக்கரையோரம், இட்சுவணேசுவரம், உறையூர் சிவ ஆலயங்களின் தலவிருட்சமாகவும் விளங்குகிறது.

குண்டான உடலை குறைக்க ஆண்களும், பெண்களும் பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். நடை பயிற்சி, கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர். விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் போன்றவற்றையும் வாங்கிச் சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர்.
இப்போது, சிரமமே இல்லாத செலவே பிடிக்காத வழிமுறையை கண்டு பிடித்து, மருத்துவ வல்லுனர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வருமாறு:-
 சங்க இலக்கியம் ‘கரும்பு’ சக்கரம் ஆஃபிசினேரம் () என்னும் அறிவியல் பெயர் கொண்டது. ‘கிராமினே’ என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.
தாவரவியலுள் இது ஒரு வகையான புல் எனப்படும். தொல்காப்பியமும் இதனைப் ‘புல்’ எனக் கூறுகிறது.
தொன்றுதொட்டு தமிழ் நாட்டில் வளர்க்கப்படும் கரும்பு, அதியமானின் முன்னோரால் அவர் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது என்று ஒளவையார் கூறுவர். உலகிற்கு சுவையான சர்க்கரை கரும்புச் சாற்றிலிருந்து பெறப்படுகின்றது.
சங்க இலக்கியப் பெயராக இவை ‘கரும்பு’ என்றே அழைக்கப்படுகின்றது. அந்தரத்து பெறுதற்குறிய “அமிர்தம் போன் கரும்பை இங்கு தந்தவனுடைய வழித்தோன்றலே” என்று பாடல் தொடங்குவதை சுட்டிக்காட்டி கரும்பு தொன்று தொட்டு தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது. இது முதன் முதலாக தென தமிழ்நாட்டில் தோன்றியிருக்கக்கூடும் என்றும் தாவரவியல் அறிஞர்கள் அறிவியல் அடிப்படையில் கூறியுள்ளனர்.
மெல்லிய வெண்மை நிறமான மணமற்ற இதன் பூக்களை ஆண் குருவி தனது இணையின் எதிர்கால நலனுக்கு, கூடு கட்டும் பொருட்டு எடுத்துச் செல்லும் எனவும் பாடியுள்ளனர் புலவர்கள்.
இனிய சுவைச்சாற்றால் உலகத்திற்கே இனிப்பை வழங்கும் பெருமை கொண்ட இத்தாவரம் இந்தியாவிலும், சீனாவிலும் பயிரிடப்படுகிறது.
கரும்பிலிருந்து சாறு பிழிந்து எஞ்சிய சக்கை, காகிதம் செய்வதற்குப் பயன்படும். இதன் இலைகள் மக்கிப் போய் நல்ல எருவாகவும் விளங்குவதாக இலக்கிய குறிப்புகள் தெரிவிக்கின்றன.

Wednesday, August 3, 2011

திராட்சை பழத்தின் மருத்துவ குணம்


ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு.

உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம்.
திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும்.
ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.

பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.
திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும்.
திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும்.

சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.

திராட்சை என்றதும் நம் நினைவில் வருவது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். ஆனால் திராட்சையில் பல வகைகள் உள்ளன. அதில் நிறைய சத்துக்கள் உள்ளது. திராட்சை சாறிலிருந்து ஒயின் தயாரிக்கபடுகிறது.

திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற திராட்சை சிறந்த மருந்தாகும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சப்பிட கூடாது.

இதை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புகள், பற்கள் கெட்டிப்படும். மேலும் இருதயம் பலப்படும் . திராட்சை பல நிறங்களில் கிடைக்கிறது. இது வெள்ளை, வெளிர்பச்சை, கருஞ்சிவப்பு, ஊதா அல்லது கறுப்பு என பல நிறத்தில் இருக்கும்.சில வகைகளில் விதைகள் இருக்காது.

அனைத்து வகை திராட்சைகளும் உடல் நலத்திற்கு மிக மிக நல்லது திராட்சையை தினமும் உண்ண வேண்டும். திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம் உள்ளது . இது தவிர கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் மற்றும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.

நாற்பது வயதிற்கு மேல் பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ஜூஸ் தினமும் குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய்த் தொல்லை வராது.

மது குடித்தால் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் தீவிரமாக தாக்கும் என்று சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். அப்படி மார்பகப் புற்று நோய் தாக்கப்பட்ட பெண்களுக்கு, அருமருந்தாக உள்ளது திராட்சைப் பழம்!

பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

`ரெஸ்வெரட்டால்’ என்கிற ஒருவகை இயற்கை அமிலம் திராட்சையில் அதிகமாக காணப்படுகிறது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுப்பதுடன், தேவையில்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

மேலும், ரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும், ஆங்காங்கே ரத்தம் உறைவதை தடுப்பதிலும் திராட்சை முக்கிய பங்கு வகிக்கிறது.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட திராட்சையை மதிய உணவுக்குப் பின் 200 மில்லி அளவுக்கு ஜூஸாக எடுத்துக்கொள்வது நல்லது என்பது இயற்கை மருத்துவர்களின் அறிவுரை. பெண்கள் மட்டுமல்ல… ஆண்களும் அதிகமாக திராட்சை சாப்பிடுவது பலவிதத்திலும் நல்லது.

Tuesday, August 2, 2011

வினோதமான தம்பதிகள்

26 வயதான அஹமத் என்பவருக்கு முற்றிலும் இரண்டு கைகளும் இல்லை. 25 வயதான பாத்திமாவுக்கு இரண்டு கால்களும் இல்லை. கடந்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியுடன் வாழும் இந்த தம்பதிகளை நீங்களும் பாருங்கள்.





Monday, August 1, 2011

இளம்பிள்ளை வாதம்


போலியோ நோய்தொற்று முழு உடலையும் பாதிக்கக்கூடியது. ஆனாலும் இந்நோய் எப்போதும் நரம்புகள் மற்றும் தசைகளை பாதிக்கிறது.
காரணங்கள்
வைரஸ் நோய் தொற்றுவினால் போலியோ ஏற்படுகிறது
மனிதனின் மலம் மற்றும் கழிவுகளில் போலியோ வைரஸ் காணப்படும். இவ்வைரஸினால் மாசுபட்ட உணவுகளை உட்கொள்ளும் போது போலியோ பரவுகிறது. மனித மலம் கழிவுகள் மூலம் மாசுபட்ட குடிதண்ணீர் அல்லது கிணறு/குளங்கள்/ஏரிகள் போன்றவற்றின் நீரில் நீந்தும் போதோ, குளிக்கும் போதோ அல்லது குடிக்கும் போதோ போலியோ  வளர்ந்த பிள்ளைகள் மற்றும் வாலிபர்களைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான வேலைகளில், இவ்வகை வைரஸ் மலத்திலிருந்து வாய் வழியாகவே ஒரு நபரிலிருந்து மற்ற நபருக்கு பரவுகிறது.
இவ்வகை வைரஸ் மூக்கு அல்லது வாய் வழியாக நுழைந்து, பின்னர் குடல் பகுதியை சென்றடைகிறது. குடல் செல்களில் எண்ணிக்கையில் பெருக்கம் அடைகின்றது. பின்னர் இவ்வைரஸ்கள் மலத்தின் மூலம் வெளியேற்றப்படுகிறது (சில வாரங்களில்). இப்படியாக வாழ்க்கை சுழற்சியை புதுப்பித்து, முழு சமுதாயத்திற்கும் ஆபத்தினை விளைவிக்கும் இடற்களை ஏற்படுத்துகிறது.
அறிகுறிகள்
மிதமான நோய்தொற்று
மூளை மற்றும் தண்டு வடத்தில் நடுத்தரமான நோய்தொற்று
மூளை மற்றும் தண்டுவடத்தில் மோசமான நோய் தொற்று
பெரும்பாலான நிகழ்வுகளில், நோயாளிகள் எந்த அறிகுறிகளும் இன்றி காணப்படுவர். காணப்படும் அறிகுறிகளாவன,
  • ப்ஃளு போன்ற அடையாளங்கள்
  • வயிற்று வலி
  • வயிற்றுப் போக்கு/பேதி
  • வாந்தி
  • தொண்டை வறட்சி
  • மிதமான காய்ச்சல்
  • தலைவலி

  • மிதமான நோய்தொற்றுவில் ஏற்படும் அனைத்து அடையாளங்கள்.
  • நடுத்தரமான காய்ச்சல்
  • கழுத்து விரைத்துப் போதல்
  • முழங்காலின் பின்பகுதியில் உள்ள தசைகளில் மிருதுவாகும் மற்றும் வலி தோன்றும்.
  • முதுகு வலி
  • வயிற்று வலி
  • தசைகள் விரைத்துப் போதல்
  • பேதி
  • தோலில் கொப்புளங்கள்.
  • அதிகப்படியான பெலவீனம் அல்லது சோர்வு
  • கை, கால்களில் உள்ள தசைகள் பெலவீனமடைதல் மற்றும் தசைகள் செயலிழப்பு வேகமாக ஏற்படுதல்.
  • தசையில் வலி, தசை மென்மையாதல் மற்றும் தசை பிடிப்பு (கழுத்து, முதுகு, கைகள் அல்லது கால்களில்)
  • கழுத்தை அசைத்தல், கை அல்லது காலை தூக்குவது  போன்ற செயல்களை செய்ய முடியாமல் போதல்
  • வயிறு வீக்கமடைதல்
  • முகபாவனை செய்வது கஷ்டமாதல்
  • மலம் மற்றும் மூத்திரம் கழிப்பதில் பிரச்சினை ஏற்படுதல் (மலச்சிக்கல்)
  • உணவு மற்றும் தண்ணீரை விழுங்குவது கஷ்டமாதல்
  • சுவாசிப்பதில் கடினதன்மை
  • வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டிருத்தல்
ஏற்படக்கூடிய சிக்கல்கள்
இதய தசைகளில் நோய்தொற்று ஏற்படலாம். கோமா எனும் சுயநினைவு இழத்தல் மற்றும் மரணம்.
இடர் காரணிகள் / ஆபத்தான காரணிகள்
  • சிறுபிள்ளைகளுக்கு போலியோ ஏற்படும் அதிக ஆபத்து உள்ளது. கழிவரைளில் மலம் கழிக்கும் பழக்கம் கற்றறியாத பிள்ளைகளை குறிப்பாக பாதிக்கிறது.
  • போலியோ தடுப்பு ஊசி எடுத்துக் கொள்ளாத பெரியவர்கள்.
  • இந்நோய் கண்ட நபரின் மலத்தின் மேல் மொய்க்கும் ஈக்கள் உண்ணும் உணவின் மேல் உட்கார்ந்து உணவை மாசுபடச் செய்யும் சூழலுள்ள பகுதிகள்.
  • இந்நோய்க் கிருமியுள்ள குடிதண்ணீர் (கழிவு நீர் தேங்கியுள்ள பகுதிக்கு அருகாமையில்)
  • எயிட்ஸ் மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்பட்டு உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைந்து காணப்படும் போது.
சுரவாத காய்ச்சலுக்கான அறிகுறிகள்
·குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருக்கும்.
·மலச்சிக்கல் உருவாகும். 
·3 நாள் முதல் 8 நாள் வரை காய்ச்சல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

காய்ச்சலின் வேகம் அதிகரிப்பதால் இடுப்புப் பகுதி செயலிழந்துவிடுகிறது.  வாதத்தில் அதிகம் பாதிக்கப் படும் வாதம் சுரவாதம்  என்பதால் இதனை முதலில் வைத்துள்ளனர்.

இந்த சுரவாதமானது தாயின் வயிற்றில் கரு உற்பத்தியாகும்போதும், 10 மாதம் அதாவது 300 நாட்கள் வயிற்றில் வளரும்போதும் அந்த தாய்க்கு மன அழுத்தம், மனக் கவலை, மன உளைச்சல், திடீர் அதிர்ச்சி, பயம், காமம், கோபம் போன்றவற்றால் உடலில் உள்ள தச வாயுக்கள் பாதிப்படைகின்றன.  அக்டோபர் இதழில் இதைப்பற்றி தெளிவாக அறிந்திருப்பீர்கள்.

தாய்க்கு மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை இருந்தால்கூட குழந்தை பிறந்தபிறகும் இந்த சுரவாத நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.  இளம்பிள்ளை வாதம் என்பது உலகையே ஆட்கொள்ளும் கொடிய நோயாகும்.  இந்த நோயின் தன்மை பற்றி அகத்தியர் எழுதிய நூல்கள் அனைத்தும் நமக்குக் கிடைத்த பொக்கிஷம் ஆகும்.

குழந்தை தொப்புள் கொடி சுற்றி பிறப்பதும் இந்த பாதிப்பால்தான்.  அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுப்பதும் இத்தகைய பாதிப்பால்தான்.

அளவுக்கு அதிகமான கால்சியம், இரும்பு, வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதால் தாயின் குடலில் புண் ஏற்பட்டு அதனால் குழந்தைக்கு பாதிப்பு எற்படுகின்றது.

ஈரத்தலையுடன் பால் கொடுப்பதால் சுரவாதம் ஏற்பட வாய்ப்பாகிறது.

பொதுவாக இந்த நோயானது கருவிலிருக்கும் போது இருக்கும். குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் அருந்தும்போது தாய்க்கு உடலில் நோய் தாக்கினால் அது பாலின் வழியாக குழந்தைக்கு சென்று தாக்கும்போது சுரவாதத்தின் தன்மை வெளிப்படும்.

அதிமதுரம் - 5 கிராம்,  நற்சீரகம் - 5 கிராம், ஜடமாஞ்சி - 5 கிராம், சாரணைவேர்- 5 கிராம், வில்வவேர் - 5 கிராம்,  முடக்கத்தான் - 5 கிராம், குறுந்தொட்டி - 5 கிராம் இவற்றை இடித்து சலித்து 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து 200 மிலி ஆகும் பக்குவம் வரை காய்ச்சி பின் இளநீர் விட்டு மீண்டும் சிறிதுநேரம் கொதிக்க வைத்து ஆறிய பின்பு வடிகட்டி காலை அல்லது மாலை ஒருவேளை மட்டும் 1/2 டம்ளர் வீதம் அருந்தி வர வேண்டும்.  கசப்புத் தன்மை இருக்காது.  இந்த கஷாயத்தை கர்ப்பமான நான்காவது மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும்வரை அருந்தி வந்தால் குழந்தைக்கு எந்தவிதமான வாத நோயும் தாக்காது.

அகத்தியர் வர்ம கண்டி,  அகத்தியர் பாலவாகடம் போன்ற நூல்கள் மூலம் தெளிவாக விளக்கியுள்ளார்.

 
போலியோவை தடுத்துக் காக்க
  • உங்களையும் மற்றும் உங்கள் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்.
  • பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுதல் (தடுப்பூசி அட்டவணையினைப் பார்க்க)
  • ஊட்டச்சத்துள்ள ஆகாரத்தை உட்கொள்ளுதல்.
  • கருவில் குழந்தை வளரும்போது தாய்க்கு எந்தவிதமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • இதற்காகவே நம் முன்னோர்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். சுற்றத்தாரும், சொந்தங்களும் அப்பெண்ணை வாழ்த்தும்போது அவள் உள்ளம் மகிழும். அப்போது குழந்தை நன்கு ஆரோக்கியமாக வளரும்.
  • மலச்சிக்கல் ஏற்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.  வாயுவை உண்டாக்கும் பொருட்களை சாப்பிடக் கூடாது.

Tuesday, July 26, 2011

புற்றுநோய்


புற்றுநோய் (Cancer) கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.


புற்று நோய் - ஒரு விரிவான விளக்கம்

செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உண்டாக்கப்பட்டுள்ளது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உண்டுபண்ணுகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறக்காமல் இருக்கின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (க்ரோத்) அல்லது கழலை (டியூமர்) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.
எல்லாக் கழலைகளும் (டியூமர்) புற்று நோய் போன்றவையல்ல. கழலைகள் தீங்கில்லா கழலைகள் (பினைன் டியூமர்ஸ்) மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் (மாலிக்கண்ட் டியுமர்ஸ்) என இருவகைப்படும்.
தீங்கில்லா கழலைகள் என்பவை புற்றுநோய் அல்ல. அவைகளை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவை நீக்கின பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.
கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாக மற்றும் எந்த கட்டுப்பாடுமின்றி பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.
இரத்த நாளங்கள் (ஆர்டரி-தமனி, வெய்ன்-சினை, கேட்டல்லரி-நுண்ணாளி) மூலம் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. நிணநீர் மண்டலம் (லம்பாடிக் சிஸ்டம்), நிணநீர் மற்றும் இரத்த வெள்ளை அணுக்களை, நிணநீர் நாளங்கள் உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் எடுத்துச் செல்லும். கேடு விளைவிக்கும் கழலை உடைந்து, அதிலிருந்து வெளிவரும் புற்றுநோய் செல்கள், இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் மண்டலத்தின் மூலம் மற்ற உடல் உறுப்புகளுக்குச் சென்று அப்பகுதியில் கழலைகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு புற்று நோய் பரவுவதை திசுத்தொற்று (மெடாஸ்டாஸிஸ்) என்பர்

புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனின்று வெளிப்படும் புறஊதாக்கதிர்கள் அல்லது புற்றுநோய் ஏற்படக்கூடிய சூழல் உள்ள பணித்தளங்கள் போனறவற்றிற்கு உட்படும்போது இது போன்ற மாற்றங்கள் மரபிகளில் ஏற்படுகிறது. எச்.ஐ.வி நோய் தொற்றுவில் இது போன்ற திடீர் மாற்றம் ஏற்படும். சில வேளைகளில், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்

புற்றுநோய் வராமல் தடுத்துக்காக்க முடியமா?

புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்க உதவும் சில வழிமுறைகள்
  • புகையிலை பயன்படுத்தக்கூடாது.
  • கொழுப்பான உணவைக் குறைத்து, அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.
  • முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
புற்று நோய்க்கான சில பொதுவான அறிகுறிகள் யாவை?

புற்றுநோய் வேறுபட்ட அடையாளங்களை ஏற்படுத்தும். அவற்றில் இயல்பாக ஏற்படக்கூடிய அடையாளங்களாவன:
  • மார்பு அல்லது மற்ற பகுதிகளில் தடிப்பு அல்லது வீக்கம்
  • புதிய மச்சம் அல்லது ஏற்கெனவே உள்ள மச்சத்தில் கண்கூடாக காணக்கூடிய அளவுக்கு மாற்றங்கள்.
  • குணப்படாத புண்கள்.
  • கொடுமையான ஓயாத இருமல் அல்லது கரகரப்பான கம்மிய குரல்.
  • மலம் மற்றும் மூத்திரம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்.
  • தொடர்ந்து அஜீரணத்தன்மை அல்லது விழுங்குவதில் பிரச்சினை.
  • விவரிக்கமுடியாத விதத்தில உடல் எடையில் மாற்றம்.
  • இயல்புக்கு மாறாக இரத்தப்போக்கு மற்றும் இரத்த கசிவு
புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?

அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி), வேதி மருத்துவம் (கீமோதெரப்பி), ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும்., புற்றுநோயின் வகை, பாதிக்கப்பட்டிள்ள இடம், நோயின் பரவும் தன்மை, நோயாளியின் வயது மற்றும் பொது உடல் நலம் மற்றும் பிற காரணிகளைப் பொருத்து மேற்கூறிய ஒன்று அல்லது பல மருத்துவமுறைகளை பயன்படுத்தி மருத்துவர் சிகிச்சை அளிப்பர்.

புற்றுநோய் எப்போதும் வலியை ஏற்படுத்துமா?

புற்றுநோய் எப்பொழுதும் வலியை ஏற்படுத்தும் என்று அர்த்தமல்ல. புற்றுநோயின் வகை, நோயின் அதிகரிப்புதன்மை மற்றும் நோயாளியின் வலி பொறுத்துக் கொள்ளும் தன்மையைப் பொறுத்து வலி இருக்கும். பெரும்பாலும் புற்று நோய் வளர்ந்து, எலும்புகள், உறுப்புகள் அல்லது நரம்புகளை அழுத்தும் போது வலி ஏற்படுகிறது.

புற்று நோய் வகைகள்

புற்றுநோயில் பலவகைகள் உள்ளன. புற்றுக்கலங்கள் உள்ள இடத்தைக் கொண்டு அவை தொண்டைப்புற்றுநோய், குடல் புற்று, இரத்தப்புற்று என அழைக்கப்படுகின்றன. புகை பிடித்தல், கதிர் வீச்சுக்கு ஆட்படுதல், குடிப்பழக்கம், சில வகை நுண்மங்கள் (வைரஸ்) போன்றவை புற்று நோய் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.
  • மார்பகப் புற்று நோய்
  • இரத்தப்புற்று நோய்.....இன்னும் பல


இரத்தப்புற்று நோய்

லுகிமியா அல்லது லுகேமியா என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்றுநோய். இரத்த செல்கள் குறிப்பாக, வெள்ளை இரத்த அணுக்கள் இயல்புக்கு மாறாக அதிகளவில் பெருகும் நிலை காணப்படும்.


அறிகுறிகள்
  • அதிகளவில் இரத்தம் வடிதல்
  • இரத்தசோகை
  • காய்ச்சல், குளிர், இரவுநேரத்தில் வேர்த்தல் மற்றும் ப்ளு போன்ற அடையாளங்கள்
  • பலவீனம் மற்றும் சோர்வு
  • பசியின்மை மற்றும் /அல்லது எடை குறைதல்
  • பல் ஈறுகள் வீக்கமடைதல் அல்லது இரத்தம் வடிதல்
  • நரம்பியல் சம்பந்தமான அடையாளங்கள் (தலைவலி)
  • ஈரல் மற்றும் கணையம் வீக்கமடைதல்
  • காயங்கள் சுலபமாக ஏற்படுதல் மற்றும் அடிக்கடி நோய்தொற்று ஏற்படுதல்
  • மூட்டு வலி
  • உள்நார்தசைகள் வீக்கமடைதல்

மார்பகப் புற்றுநோய்

மார்பகப்புற்று நோய் என்பது பெண்களில் ஏற்படும் பொதுவான வகை புற்றுநோயாகும். பெண்களில், மரணத்தை ஏற்படுத்தும் புற்றுநோய் வகைகளில் இரண்டாம் மிக பொதுவான காரணமாகும்.

அறிகுறிகள்
  • மார்பு வீங்குதல்
  • மார்புக் காம்பிலிருந்து வடிதல்
  • மார்பகக் காம்பு உள் நோக்கி இழுத்தல்
  • சிவந்த / வீக்கமடைந்த மார்புக் காம்பு
  • மார்பகம் பெரியதாகுதல்
  • மார்பு சுருங்குதல்
  • மார்பகம் கல்போல் கடினமாதல்
  • எலும்பு வலி
  • முதுகு வலி


இடர் காரணிகள்
  • குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மார்பக புற்று நோய் இருத்தல் (பெரும்பாலான நெருங்கிய உறவினர்களுக்கு)
  • பெண்களுக்கு வயதாகும் போது ஆபத்து அதிகமாகிறது.
  • ஏற்கெனவே ஏற்பட்ட மார்பக புற்றுநோய், இயல்புக்கு மாறுபட்ட மாற்றங்கள், ஏற்கெனவே உள்ள மார்பக நோய்கள்.
  • மரபுவழிக் கோளாறு அல்லது மாற்றங்கள் (அரிதான மாற்றங்கள்)
  • 12 வயதிற்கு முன்பாகவே வயதுக்கு வருதல்
  • குழந்தை இல்லாமை.
  • மது வகைகள், அதிக கொழுப்பான உணவு, அதிக நார்பொருள் உள்ள உணவு, புகைப்பழக்கம், உடற்பருமன் மற்றும் ஏற்கெனவே உள்ள கருவக அல்லது பெருங்குடல் புற்றுநோய்.


சிகிச்சை முறை
மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை, மூன்று முக்கிய காரணிகளைப் பொறுத்துள்ளது:
  • பெண்ணுக்கு மாதவிடாய் காலங்கள் நின்றுவிட்டதா?
  • மார்பகப் புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது?
  • மார்பகப் புற்றுநோய் செல்லின் வகை.


புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது என்பதை கீழ்க்கண்டவாறு வரையறை செய்யப்பட்டுள்ளது:
  • புற்று நோய் எந்த இடத்தில் உள்ளது?
  • எந்த அளவு புற்றுநோய் நிணநீர் சுரப்பி கணுக்களுக்கு பரவியிருக்கிறது?
  • புற்றுநோய் மார்பகத்தின் உள்பகுதியில் உள்ள தசை வரை பரவியுள்ளதா?
  • மற்றொரு மார்பகத்திற்கும் புற்றுநோய் பரவியிருத்தல்
  • புற்றுநோய் மற்ற உடல் உறுப்புகளுக்கு பரவியிருத்தல் உ-ம் எலும்பு அல்லது மூளை

புற்றுநோய் செல்களின் வகையைப் பொறுத்து சிகிச்சை முறை வேறுபடுகிறது
  • மோர் ஆக்ரஸிவ் செல் (அதிக ஆக்கிரமிக்கும் செல்)
  • லெஸ் ஆக்ரஸிவ் செல் (குறைவாக ஆக்கிரமிக்கும் செல்)

மேற்கூறிய காரணிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் என்ன செய்யலாம் என முடிவு செய்வர்:
  • கதிர்வீச்சு மருத்துவத்தினை பயன்படுத்தி அல்லது பயன்படுத்தாமல் வீக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள திசுக்களை அகற்றுவது.
  • முழு மார்பக பகுதியையும் அகற்றுவது.


தடுத்துக் காத்தல்
  • மாதாமாதம் மார்பகத்தினை தற்பரிசோதனை செய்தல்.
  • உங்கள் மருத்துவரிடம் வருடத்திற்கு ஒரு முறை சென்று மார்பகப் பரிசோதனை செய்தல்.
  • சத்தான உணவுகளை உட்கொள்ளுதல்.

உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்குமோ என சந்தேகம் ஏற்படும்போது உடனடியாக மருத்துவரை அணுகவும். மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தக்கூடிய ஒன்று. ஆனால் கண்டறியப்படவில்லையென்றால் மரணத்திற்கு நேராக வழி நடத்தும்


உலக அளவிலான புற்று நோய் மருத்துவ மையங்கள்


மகரகம புற்றுநோய் வைத் தியசாலை மற்றும் அமெரிக்கா உட்படப் பல்வேறு நாடுகளில் உள்ள துறைசார் வைத்தியர்களின் உதவியுடன் யாழ். போதனா வைத்தியசாலைப் புற்றுநோய் பிரிவில் உள்ள நோயாளர்களுக்கு ஒன்லைன் மூலம் மன ஆற்றுப்படுத்தல் சிகிச்சை வழங்கப்படவுள்ளது.


யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளர் சிகிச்சை பிரிவு அமைக்கப்படவுள்ளது.

Monday, July 25, 2011

நெல்லிக்காய்

 
 தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை.

கருநெல்லி, அருநெல்லிஎன்ற இரு இனம் உண்டு.
அரு நெல்லி அத்தனை மருத்துவ குணம் உடையது இல்லை .மிக சிறியதாக இருக்கும் .
கரு நெல்லி , எனும் தோப்பு நெல்லி எனும் காய் தான் சத்துநிறைந்தது , உருண்டையாக இருக்கும் .

இலை, பட்டை.வேர்,காய்,பழம்,காய்ந்த பழம், பூ, மற்றும் வேர்பட்டை,விதை அனைத்தும் பயன்தருவது .
சத்துக்கள் விவரம்
மாவுச் சத்து-14 கி. புரத சத்து-0.4 கி. கொழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி.கால்ஷியம்-15 மி.கி. இரும்புச்சத்து - 1 மி.கி. வைட்டமின் பி1 28 மி.கி. வைட்டமின் சி 720 மி.கி. நியாசின் - 0,4 மி.கி. கலோரிகள் - 60

வேறு எந்த காயகனியிலும் இதிலுள்ள வைட்டமின் 'சி ' அளவைப் போல் பெற இயலாது. ஒரு நெல்லிக் காயில் இருபத்து --முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்து உள்ளது.


நெல்லிக்காய் சாறு 15 மி.லி. தேன் 15 மி.லி.எலுமிச்சைச்சாறு 15 மி.லி.கலந்து காலை மட்டும் சாப்பிட்டு வர மதுமேகம் முற்றிலும் தீரும்.
மஞ்சளையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து சிறுநீர்ப்பைத் தொற்று வியாதிகளுக்கு மருந்தாகக் கொடுப்பார்கள்.


சிறுநீர் கழியாமல் தடைபடும் நிலையில் ஏலக்காயையும், நெல்லிக்காயையும் சேர்த்து அரைத்து மருந்தாகக் கொடுப்பார்கள்.
இரத்தம் கலந்து சிறுநீர், சிறுநீர் கழியும் போது வரும் எரிச்சல் போன்றவற்றிற்கு நெல்லிக்காயை தேனில் கலந்து அரைத்துக் கொடுப்பார்கள்.


நெல்லிக்கனி விதையைப் பவுடராக்கி, அதனுடன் அரிசி கஞ்சியை கலந்து கொடுத்து வந்தால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் கட்டுப்படும்.
தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்து ணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக் காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.


ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.
நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.
ஒரு ஸ்பூன் நெல்லிக்காய்பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராது.
உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்குவியாதி குணமாகிவிடும்.

அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.
அமலா கூந்தல்தைலம் கேடத்திற்கு நல்லது .உடலுக்கு குளிர்ச்சி தரும் .
ஆயுளை நீட்டிக்கும் அற்புதமான மூலிகை நெல்லியாகும். உடம்பில் உண்டாகும் வெட்டைச் சூட்டினால் கன்னம் குழி விழுந்து ஒட்டிப்போய், தேகம் வறண்டு, நடை தளர்ந்து நாணலாகிப் போன இளைஞர்கள் இன்று நிறைய பேர் இருக் கிறார்கள். இவர்கள் இருபது வயதில் அறுபதை எட்டியவர்கள். இவர்கள் மன்மத அழகுடன் வலம் வர நெல்லிக்கனியைச் சரணடைவதே மிகவும் நல்லது.

நெல்லிக்காயை அரைத்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு தினசரி சாப்பிட்டு வரவும். அல்லது நெல்லிக்காயைத் தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயை துவையல், சட்னி, சூப் போன்ற ஏதேனும் ஒரு முறையில் தினசரி சாப்பிட்டு வரலாம்.
ஆயுர்வேத மருந்து விற்பனைக் கூடத்திற்குச் சென்று, உலகப் பிரசித்தி பெற்ற "சயவனபிராச லேகியம்' அல்லது "நெல்லிக்காய் லேகியம்' எனக் கேட்டு வாங்குங்கள். இதனை தினசரி காலை- மாலை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். எண்ணற்ற பலன்களை இந்த ஒரே மருந்தினால் நீங்கள் பெறலாம்.

நெல்லிமுள்ளி, மருதம்பட்டை, கடல் அழிஞ்சில், மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் வாங்கி ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் 40 கிராம் படிகார பற்பம் கலந்து வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு (அரை ஸ்பூன்) காலை- இரவு இருவேளையும் உணவுக்குப்பின் சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்படும்.
கடைகளில் "நிஷா ஆமலகி சூரணம்' என்ற பெயரில் விற்பனைக்குக் கிடைக்கிறது. உபயோகித்து சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம்.

சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.

நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.
நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.


நெல்லிக்கனி எல்லாமே நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவ குணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்ன வேண்டும். அதனால் பற்களும், ஈறுகளும் பலப்படுத்துவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கும். கணைச்சூட்டினால் அவதியூறும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை சாறாகப் பிழிந்து கொடுக்க நல்ல பலனளிக்கும்.

vedio

film